செப்டம்பர் 02: முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க 40 வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று ஐஜி ராமசுப்பிரமணி கூறினார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் நாளை (3ம் தேதி) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறை சார்பில் பல்வேறு முன் ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் திருச்சி மத்திய மண்டல ஐஜி ராமசுப்பிரமணியன், ஊர்வலப்பாதையை பார்வையிட நேற்று மாலை முத்துப்பேட்டைக்கு வந்தார். பின்னர் ஊர்வலம் துவங்கும் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவில் பகுதியை ஆய்வு செய்த அவர் அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலப்பாதையான ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரையாறு பாலம், ஆசாத் நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பங்களாவாசல், பட்டுக்கோட்டை சாலை, செம்படவன்காடு ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் சிலை கரைக்கும் இடமான கீழக்காடு சுந்தரம் பாமினி ஆறு பாலம் மற்றும் கரைப்பகுதியை ஆய்வு செய்தார்.
பின்னர் முத்துப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த ஐஜி ராமசுப்பிரமணியன் நிர்பர்களுக்கு அளித்த பேட்டியில், வழக்கம்போல் விநாயகர் ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெறும். அமைதியாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இரு தரப்பினரையும் பலமுறை அழைத்து பேசப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 40 வீடியோ கேமராக்கள் எடுக்கப்படும். நகரில் முக்கிய பகுதியில் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பொது மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். ஆய்வின்போது, தஞ்சை சரக டிஐஜி. சஞ்சைகுமார், தஞ்சை எஸ்பி தர்மராஜ், திருவாரூர் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார், மன்னார்குடி ஆர்டிஓ சுப்பு, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், திருவாரூர் ஏடிஎஸ்பி பேகம், முத்துப்பேட்டை டிஎஸ்பி கணபதி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் உடன் சென்றனர்.



No comments:
Post a Comment