பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அளுத்கம வன்முறைகளுக்குக் காரணமான பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் காலையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால், அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும், பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
அதற்கு சிறிலங்கா அதிபர், பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்றும், அவ்வாறு செய்தால் அவர்கள் கதாநாயகர்களாகி விடுவர் என்றும் குறிப்பிட்டார்.
அடிப்படைவாத அமைப்புகளைத் தடை செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், அதன் மூலம் மதங்களுக்கிடையிலான பிரச்சினை முடிந்து விடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பை மோசமாக மீறும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களைக் கைது செய்திருந்தாலும் கூட, அத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்காது என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச, அளுத்கம வன்முறைகளுக்கு சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாதிகளே பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பொது பலசேனவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அப்போது, குறுக்கிட்ட அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, பொதுபல சேனாவைப் பாதுகாக்க ஜாதிக ஹெல உறுமய முற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


No comments:
Post a Comment