பிப்ரவரி 20: வாட்ஸ் ஆப் (Whatsapp Messenger) நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கவுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வாட்ஸ் ஆப். குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (app) இது.
தினமும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வாட்ஸ் ஆப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஃபோனில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையில், வாட்ஸ் ஆப்-ன் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.
வாட்ஸ் ஆப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம், அதன் பயனர்களுக்கான பிரத்யேக செயலியான ஃபேஸ்புக் மெஸென்ஜரை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ் ஆப் -இன் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது அந்நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது.
தொடர்ந்து வாட்ஸ் ஆப் தன்னிச்சையாக செயல்படும் என்றும், அதன் பிராண்ட் மாற்றப்படாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும், வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் யான் கூம், ஃபேஸ்புக்கின் வாரிய இயக்குநர்களில் ஒருவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஃபேஸ்புக் மெஸென்ஜரும் தனித்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
"நூறு கோடி மக்களை இணைக்கும் பாதையில் வாட்ஸ் ஆப் பயணித்து வருகிறது. அந்த மைல்கல்லை எட்டும் எந்த சேவையும் மதிப்பு வாய்ந்தது" என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment