செப்டம்பர் 15: முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலப்பாதையை மத்திய மண்டல ஐஜி ஆய்வு.
முத்துப்பேட்டையில் 22ம்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடை பெறுவதையொட்டி ஊர்வல பாதையை மத்திய மண்டல ஐஜி ராமசுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டையில் வருகிற 22ம்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இதனையடுத்து காவல்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
விநாயகர் ஊர்வலத்தில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக திருவாரூர் எஸ்.பி. ஜெயசந்திரன் முத்துப்பேட்டையில் முகாமிட்டு எஸ் டி பி ஐ கட்சியினர் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டறிந்தார்.
மேலும் நேற்று காலை விநாயகர் சிலை ஊர்வல கமிட்டியினரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந் நிலையில் நேற்று மாலை மத்திய மண்டல ஐஜி. ராமசுப்பிரமணியன் விநாயகர் சிலை ஊர்வல பாதையை பார்வையிட முத்துப்பேட்டைக்கு வருகை தந்தார்.
முன்னதாக வனத்துறை அலுவலக கட்டிடத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் சிலை ஊர்வலம் துவங்கும் ஜாம்புவானோடை வடகாடு, சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஜாம்புவானோடை தர்கா கோரையாற்று பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார். பதற்றமான பகுதியான ஆசாத் நகர் மெயின்ரோடு, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை ஆகிய பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார்.
பின்னர் விநாயகர் சிலை கரைக்கும் பகுதியான செம்படவன் காடு பாமினி ஆற்று பாலம் மற்றும் கரைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
திருவாரூர் எஸ்.பி. ஜெயசந்திரன், தஞ்சாவூர் எஸ்.பி. தர்மராஜ், நாகை எஸ்.பி. அபினவ்குமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வசுரபி, முத்துப்பேட்டை டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக் டர் ராஜ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment