ஜுன் 15: வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறவேண்டுமானால் அந்நாட்டின் சாலை மற்றும் போக்குவரத்துக் கழகம் (RTA) நடத்தும் 30 நிமிட தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம். இந்த தேர்வானது கணினி மூலமாக நடத்தப்படும். இதனை ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே இதுநாள் வரையில் எழுத முடியும் என்று இருந்தது. இதனால், இந்தியாவைச் சேர்ந்த பலர், ஓட்டுநர் உரிமம் பெற விரும்பியும், அதற்காக பல தடவை முயற்சி செய்ய வேண்டி இருந்தது. சிலர் ஓட்டுநர் உரிமம் வாங்கமுடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், புதிதாக 7 மொழிகளை சேர்க்க துபாய் நாட்டின் ஆர்டிஏ முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, சைனீஸ், ரஷியன், பெர்ஷியன் ஆகிய 7 மொழிகளில் ஓட்டுநர் உரிமம் பெற தேர்வு எழுதலாம். துபாய் அரசின் இந்த நடவடிக்கையால், இனி மிக எளிதாக இந்தியர்கள் துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறமுடியும்.
இதுகுறித்து துபாய் சாலை போக்குவரத்து ஆணையத்தின், ஓட்டுனர் பயிற்சி மற்றும் தகுதி பிரிவின் இயக்குனர் ஆரிப் அல் மலேக் கூறுகையில், "வரும் செப்டம்பர் முதல் தமிழ், மலையாளம், இந்தி, வங்கம், சீனா, ரஷ்யா மற்றும் பெர்ஷிய மொழிகளிலும் ஓட்டுனர் பயிற்சிக்கான தேர்வு நடத்தப்படும். இதனால் எட்டு விரிவுரை வகுப்புகள் மற்றும் எழுத்து தேர்வுகளுக்கு மொத்தம் உள்ள 11 மொழிகளில் ஒருவர் தனக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். திரையில் தெரியும் வாசகத்தின் ஒலி வடிவை ஒருவர் 'ஹெட்போன்' மூலம் கேட்கலாம். அவரால் அந்த வாசகத்தை படிக்க முடியாது போனாலும் ஒலி வடிவில் அதை புரிந்து கொண்டு சரியாக பதில் அளிக்க முடியும்" என்றார்.
இது தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த மற்றுமொரு பெருமை என்றே சொல்லவேண்டும்!


No comments:
Post a Comment