ஜுன் 18: அமீரகத்தில் வாட்ஸ்ஆப்பில் சக ஊழியரை திட்டியவருக்கு (2,50,000 திர்கம் ) ரூ.43.5 லட்சம் அபராதம் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாட்ஸ்ஆப் மூலம் தன் சக ஊழியரை திட்டியவருக்கு ரூ.43 லட்சத்து 45 ஆயிரத்து 728 அபராதம் விதிக்கப்படக்கூடும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆன்லைன் மூலம் யாரையாவது திட்டினால் 250,000 திர்ஹம் அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைனில் திட்டியவர் வெளிநாட்டுக்காரராக இருந்தால் அவர் நாடு கடத்தப்படுவார். இந்த புதிய சட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அமீரகத்தில் ஒருவர் தனது சக ஊழியரை வாட்ஸ்ஆப் மூலம் திட்டியதுடன் அவரை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த நபர் தனது செல்போனை போலீசாரிடம் காண்பித்து வாட்ஸ்ஆப் மூலம் தன்னை திட்டியவர் மீது புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாட்ஸ்ஆப் மூலம் திட்டியவருக்கு 3 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றமும் அவரை அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டது. இந்த தண்டனை மிகவும் குறைவாக உள்ளது என்று வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
உச்ச நீதிமன்றமோ வழக்கை மறுபடியும் முதலில் இருந்து விசாரிக்குமாறும், புதிய சட்டத்தின்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி வாட்ஸ்ஆப்பில் திட்டியவருக்கு ரூ.43 லட்சத்து 45 ஆயிரத்து 728 அபராதம் விதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் நடுவிரலை காண்பிப்பது போன்ற படத்தை யாருக்காவது அனுப்பினால் சிறை தண்டனை கிடைக்கும் என்று போலீசாரும், வழக்கறிஞர்களும் எச்சரித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


No comments:
Post a Comment