மே 12: முத்துப்பேட்டை அருகே பா.ஜ.க பிரமுகர் வெங்கடேசை அவரது நண்பர்கள் உட்பட 4-பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் வி.பி.எஸ். வெங்கடேஷ் (24).
இவருக்கு சொந்தமாக பெட்ரோல் பங்க் அப்பகுதியில் உள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் வெங்கடேசன் அவரது பெட்ரோல் பங்கில் இருந்தார்.
அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட வந்தனர். அவர்களது வாகனத்திற்கு வெங்கடேசன் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தார்.
அப்போது 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெங்கடேசனை சரமாரி வெட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் தப்பிக்க அங்கிருந்த மதில் சுவர் ஏறி குதித்து தப்பினார்.
அப்பகுதியில் மேலும் 2 பேர் மறைந்து இருந்தனர். அவர்கள் வெங்கடேசனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து எடையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி. கண்ணதாசன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் ராதா ஆகியோர் கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பபூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
வெங்கடேசனின் நண்பர்கள் சித்தமல்லியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் விஜி என்கிற விஜயேந்திரன் மற்றும் தோழி கிராமத்தை சேர்ந்த அருணாசலம் மகன் மருதுபாண்டியன். இவர்கள் 3 பேரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் விஜி பற்றி தரக்குறைவாக வெங்கடேசன் பேசியதாக கூறப்படுகிறது. இதனை மருதுபாண்டியன் விஜியிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. செல்போனிலும் அடிக்கடி திட்டிக் கொண்டிருந்தனர். கடந்த 3 மாதமாக இந்நிலை நீடித்தது.
இந்த நிலையில் நேற்று இரவு பெட்ரோல் பங்கில் இருந்த வெங்கடேசன் கொலை செய்யப்பட்டார்.
அவரை அவரது நண்பர்கள் விஜி மற்றும் மருதுபாண்டியன் ஆகியோர் மேலும் 2 பேரை அழைத்து வந்து கொலை செய்ததாக வெங்கடேசனின் தந்தை பக்கிரிசாமி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்தால் தான் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுமதிப்போம் என கூறி நாச்சிக்குளம் கிராம மக்கள் சென்னை–தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தலைமையில் இந்த மறியல் நடைபெற்றது. இதில் சுமார் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பக்கிரிசாமிக்கு வெங்கடேசன் ஒரே மகன் ஆவார். கோடிக்கணக்கான சொத்து உள்ளது. ஒரே வாரிசை இழந்து விட்டோம் என அவரது தாய் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment