மே 02: பட்டரைகுளம் ஆக்கிரமிப்பு அகற்றியதை போட்டோ எடுக்க ரூபாய் 49000 செலவா?
முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றியதை போட்டோ எடுக்க ரூ.49 ஆயிரம் செலவு காட்டப்பட்டது குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால், பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சித்தி விநாயகமூர்த்தி, துணைத் தலைவர் அப்துல் வகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் காங்கிரஸ் கவுன்சிலர் மெட்ரோ மாலிக், தி.மு.க கவுன்சிலர் ஜெகபருல்லா ஆகியோர் எழுந்து, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவுப்படி முத்துப்பேட்டை பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான செலவை பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்ற விதி முறை உள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட அஜந்தா நோட்டீசில் பட்டரைக்குளம் ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு செலவிடப்பட்டுள்ள செலவினங்கள் பட்டியலில் உள்ள பல லட்ச ரூபாய் செலவை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக புகைப்படம் எடுப்பதற்காக ரூ.49,100 செலவிடப்பட்டுள்ளதாக பட்டியலில் உள்ளது. இது முறைக் கேடாக வழங்கிய தொகை. புகைப்படம் எடுக்க எப்படி இவ்வளவு ரூபாய் செலவிட முடியும்? இது வேடிக்கையாக உள்ளது. இந்த செலவினங்கள் பட்டியலை கூட்டத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். இதையடுத்து மற்ற கவுன்சிலர்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி கூறுகையில், செலவு பட்டியலில் தவறுதலாக கூடுதல் தொகை இடம் பெற்று விட்டது. சரியான தொகை விவரம் அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அது வரை அந்த செலவினங்கள் பற்றிய தீர்மானம் ஒத்திவைக்கப்படும் என்றார். அதன் பிறகு கவுன்சிலர்கள் அமைதியானார்கள்.




No comments:
Post a Comment