ஆகஸ்ட் 28: திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் மலேசியாவில் இருந்து ஏர்ஏசியா விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடைமைகளை இமிகிரேசன், வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம், மேற்கு தெரு, பனங்குளத்தை சேர்ந்த யூசுப் (45) என்பவர் புதுகை மாவட்டம், அறந்தாங்கி கோட்டையாரை சேர்ந்த முகமது (45) என போலிபெயரில் பாஸ்போர்ட் பெற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஏர்போர்ட் போலீசார் யூசுப்பை கைது செய்தனர்.
அதேபோல் நேற்று திருச்சியில் இருந்த மலேசியாவிற்கு மலிண்டோ விமானத்தில் திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோயில், நெ.1 டோல்கேட்டை சேர்ந்த சங்கரநாராயணன் (32) என்பவர் குடந்தை ரமணி (32) என்ற பெயரில் போலி பாஸிபோர்ட்டில் செல்ல முயன்று பிடிபட்டார்.
மேலும் ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சியில் இருந்து துபாய் செல்ல முயன்ற ராமநாதபுரம், திருப்பாலக்குடியை சேர்ந்த ஹீமாயூன் (50) என்பவர் அதே முகவரியில் ரகீம் (50) என போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து செல்ல முயன்றார். அதேபோல் துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூரை சேர்ந்த சேக்மைதீன் (42) என்பவர் அதே முகவரில் முகமது யாசீன் (42) என்ற போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வந்தது தெரியவந்தது. 3 பேரையும் ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூசுப், சங்கரநாராயணன், ஹீமாயூன், சேக்மைதீன் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


No comments:
Post a Comment