டிசம்பர் 01:கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் புதுக்கடையை சேர்ந்தவர் சகாதேவன்(52). இவரது மனைவி ஜோதிகா(45), இவர்களது மகள் பென்னி மரியாள்(23), மருமகன் லெனின் ஆண்டனி(26), இவர்களது ஒரு வயது குழந்தை மெர்ஷினி ஆண்டனி.
இவர்கள் அனைவரும் ஊரில் இருந்து காரில் வேளாங்கண்ணி அன்னை மாதா கோவிலுக்குவந்து கொண்டிருந்தனர். காரை மருமகன் லெலின் ஆண்டனி ஓட்டினார்.
கார் நள்ளிரவு 1 மணியளவில் திருவாரூர் மாவட்டம் எடையூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கார் சாலையில் வேகமாக வந்ததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி எடையூர் பகுதியில் சாலையின் ஓரம் உள்ள வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதையடுத்து காரில் ஆழ்ந்த தூக்க கலக்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கார் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்கியது. அவர்கள் காரில் இருந்து வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கியதால் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர்.
அவர்களுடைய சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் மற்றும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வாய்காலில் இறங்கி காரில் இருந்த அனைவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதில் சகாதேவன் மனைவி ஜோதிகா வாய்க்காலில் சென்று கொண்டிருந்த தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்றவர்கள் அனைவரும் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோதிகாவின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


No comments:
Post a Comment