மார்ச். 25: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2012-2013-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) சட்ட சபையில் தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆண்டு அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி முதல் பட்ஜெட்டை ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை முழுக்க முழுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத்தில் பேசப்படுகின்றன.
நிதி நிலை அறிக்கையில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்து செல்வி வெற்றி பெற்றதால் அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரசு கலைக்கல்லூரி அமைப்பது உள்பட பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
அதேபோல் மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரிகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதால் இந்த ஆண்டு 2 அல்லது 3 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அறிவிப்பு வெளியாகலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமையில் கூடி எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என்றும் எந்தெந்த தேதியில் நடத்துவது என்றும் முடிவு செய்கிறார்கள்.
கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் 10 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தனர். சஸ்பெண்டு நாள் இன்னும் முடிவடையாததால் இந்த கூட்டத் தொடரில் முதல் வாரம் சில நாட்களுக்கு இருவரும் பங்கேற்க இயலாது.

No comments:
Post a Comment