பிப்.23- ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர் ஓய்வு பெற சரியான தருணம் என்று கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தெண்டுல்கருடன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியவருமான கங்குலி அளித்த பேட்டியில், எந்த சூழ்நிலையிலும் தன்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியுமா, அப்படி விளையாடுவதால் இந்திய ஒருநாள் போட்டி அணிக்கு உதவிகரமாக இருக்குமா? என்பது குறித்து தெண்டுல்கர் தனக்கு தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர் களம் இறங்குவதும், உடனடியாக ஆட்டம் இழந்து வெளியேறுவதும் அனைவரையும் பாதிக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு பின்னர் தெண்டுல்கர் தனது ஒருநாள் ஆட்டம் குறித்து சீர் தூக்கி பார்த்து இருக்க வேண்டும். அவர் ஒருநாள் போட்டியில் எல்லா சாதனைகளையும் நிகழ்த்தி விட்டார்.
தெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டியது அவசியம் என்று எந்தவொரு இந்திய அணி தேர்வாளர்களும் சொல்லமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் எப்பொழுதும் நடக்காது. தற்போது அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் மூன்று வகை (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) கிரிக்கெட்டுக்கான இந்திய அணிக்கு தனித்தனி கேப்டன் நியமிக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு வருங்காலம் இல்லை என்று தேர்வு கமிட்டி கருதினால் அது குறித்து அவர்கள் தெண்டுல்கரிடம் பேச வேண்டும். இதனை செய்ய தேர்வு கமிட்டி தலைவர் ஸ்ரீகாந்த் தான் சரியானவர்.
ஏனெனில் அவர் தான் தெண்டுல்கரின் முதல் கேப்டன். ஸ்ரீகாந்த் கேப்டனாக இருக்கையில் தான் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார் என்றார்.

No comments:
Post a Comment