
பிப். 29: தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டன. பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கியது.
தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனால், பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்ட்டின் ஏ.ஐ.டி.யு.சி, பாஜகவின் பி.எம்.எஸ், காங்கிரஸ் கட்சின் ஐ.என்.டி.யு.சி., திமுகவின் தொ.மு.ச. பேரவை உள்ளிட்ட 11 பிரதான தொழிற்சங்கங்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.
சென்னை மாநகரில் பஸ்கள் வழக்கம்போல இயங்கின. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆட்டோக்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.
கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பெரிய நகரங்களிலும் போக்குவரத்து வழக்கம்போல இருந்தது. சென்னை, கோவையில் பெரிய தொழில் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டங்கள்: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம் தலைமையில் சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கிய ஊழியர்களும், தொழிலாளர்களும் பங்கேற்றனர். பாரிமுனை எல்.ஐ.சி. அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, மன்றோ சிலை, அண்ணா சாலை எல்.ஐ.சி. அலுவலகம் ஆகிய இடங்களிலும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
வங்கிப் பணிகள் 90 சதவீதம் முடக்கம்: வங்கித் துறையில் செயல்படும் 7 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் வங்கிப் பணிகள் 90 சதவீதம் முடங்கின. தமிழகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) தவிர மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் இயங்கவில்லை.
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம் கூறியது: பொது வேலைநிறுத்தம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் ஐ.ஓ.பி. தவிர மற்ற வங்கிகள் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பணியில் ஈடுபடவில்லை என்றார்.
10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு: சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் சௌந்தரராஜன் கூறியது: அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்திய இந்த 14-வது பொது வேலைநிறுத்தம் நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பெரும் வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை.
சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் பணிகள் முழுமையாக முடங்கின. கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கப்படவில்லை. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர் என்றார்.
திருப்பூர்: ஜவுளி நகரமான திருப்பூரில் ஓரளவு பாதிப்பு இருந்தது. பனியன் தொழிற்கூடங்களில் 40 சதவீத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இம் மாவட்டத்தில் ரொக்கம், காசோலை, அன்னியச் செலாவணி என நாளொன்றுக்கு நடைபெறும் ரூ.500 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment