துபாயில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. இதில் 242 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர்.
கத்திப்பாரா- பரங்கிமலை பகுதி வழியே வந்து விமானத்தை விமானி தரை இறக்க முயன்றார். ஓடுபாதை அருகே விமானத்தை தரை இறக்க முயன்றபோது விமானியின் முன்பு உள்ள கண்ணாடியில் பச்சை நிற மர்ம லேசர் ஒளி பட்டது. இதனால் விமானியின் கண் கூசியது.
அவர் விமானத்தை தரை இறக்க முடியாமல் திணறினார். விமானத்தை கவிழ்க்க சதி நடக்கிறதோ என கருதிய விமானி சில விநாடிகள் விமானத்தை அந்தரத்திலேயே நிறுத்தினார்.
பின்னர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு மிகவும் சாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளும், 9 பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விமானத்தில் லேசர் ஒளி பாய்ந்தது பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் விமானி புகார் செய்தார். அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
விமானம் மீது லேசர் ஒளிக்கற்றையை பாய்ச்சி விமானியை திணறடித்து விமானத்தை ஓடு பாதையில் இருந்து வேறு பாதையில் இறக்கி பெரும் விபத்தை ஏற்படுத்தி சதி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் ஆகியோர் விசாரணையை தொடங்கினார்கள்.
அந்த லேசர் ஒளி பரங்கிமலை, கத்திப்பாரா பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் மற்றும் கட்டிடங்கள் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதில் இரவு நேரங்களில் லேசர் விளக்குகள் பயன்படுத்தப்படுவதுண்டு. எனவே அங்கு அடிக்கப்பட்ட ஒளி விமானம் மீது பாய்ந்ததா? என்றும் விசாரணை நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் கோட்டூர்புரம் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது இதே போல் பச்சை நிற லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. அப்போது விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் தப்பியது.
இந்த நிலையில் மீண்டும் துபாய் விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
NEWS PARTNER MUTHUPET.ORG
No comments:
Post a Comment