
அக்டோபர் 19: முத்துப்பேட்டை அருகே எடையூர் தோலி கிராம வளைய நகர் பகுதியை சேர்ந்த வைத்யநாதன் என்பவரது வயலில் அதே ஊரைச்சேர்ந்த அய்யாக்கண்ணு (60), மற்றும் அவரது மருமகன் மகாலிங்கம் (40) ஆகிய இருவரும் நேற்று மாலை வயலில் சாகுபடி வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கனத்த மழை பெய்தது. இதையொட்டி இருவரும் அருகில் இருந்த வாகை மரத்திற்கு கீழே ஒதுங்கி நின்றனர். சிறிது நேரத்தில் ஏற்பட்ட இடி மின்னல் அய்யாக்கண்ணு, மகாலிங்கம் ஆகிய இருவரையும் தாக்கியது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தோலி கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் எடையூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கர், இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அய்யாக்கண்ணு, மகாலிங்கம் இருவரது பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றும் சம்பவ இடத்திற்கு மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வ ராஜ், திருத்துறைப்பூண்டி தாசில்தார் வைத்யநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனே சென்றனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த இருவரும் இடி தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment