ஏப்ரல் 22: துபாயில் வரவேற்பை பெற்ற இடியாப்பம் தொழில் நிறுவனமாக உருவாக்கிய தமிழர் !
இடியாப்ப சிக்கல் என்ற கருத்து உண்டு அந்த சிக்கலில்தான் சுவை உண்டு என்பார்கள் இடியாப்ப பிரியர்கள். தென்னிந்திய உணவு வகையான இடியாப்பம் தமிழகத்தில் பிரபலம். மூலை முடுக்கிலும் சிறு தொழிலாக இருந்த இடியாப்ப தொழில் தற்போது பெரும் தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வளைகுடா பகுதிகளிலும் இடியாப்ப தொழில் நடைபெறுகிறது. முக்கிய வர்த்தக நகரமாக திகழக்கூடிய துபாயில் முதன் முதலில் இடியாப்ப வியாபாரத்தை அறிமுகப்படுத்தி அதனையே தொழில் நிறுவனமாக உருவாக்கி நடத்தி வருபவர் தமிழகத்தை சேர்ந்த குத்தாலம் லியாக்கத் அலி.
இது பற்றி குத்தாலம் லியாக்கத் அலி கூறியதாவது...
ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழர்களும் கேரளத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் உள்ளார்கள் இவர்களுக்கான உணவில் இடியாப்பத்திற்கு முக்கிய இடமுண்டு எனவே நாம் அதனை அவர்களுக்கு சொந்த ஊரின் சுவை குறையாமல் இங்கேயே ஏன் தரகூடாது என்ற சிந்தனையின் வழியேதான் இந்த இடியாப்ப தொழிலை தொடங்கினேன்.
லாபம் குறைவாகவும் தரத்தை குறைக்காமல் இடியாப்பம் உற்பத்தி செய்ததால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நாங்கள் இத்தொழிலில் ஈடுபடுவதற்கு முன் அமீரகத்தில் உள்ள அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, காயல்பட்டிணம், கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பலர் தமது சொந்த தேவைக்கு மிகுந்த சிரமத்துக்கிடையே ஊரிலிருந்து மாவு எடுத்து வந்து இடியாப்பம் தயாரிப்பார்கள்.
ஏனென்றால் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, காயல்பட்டிணம் கீழக்கரை போன்ற ஊர்களில் இடியாப்பம் அன்றாட உணவில் இடம்பெறும் அதனை தமிழக இடியாப்ப சுவையில் துபாயிலேயே தந்ததால் அவர்கள் பலர் எங்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஆரம்பத்தில் நானே வீடு வீடாக சென்று நேரில் இடியாப்பம் கொடுத்தேன். தற்போது இதற்கென் பிரத்யோகமாக நிறுவனம் அமைத்து வாகனங்கள் மூலம் பெரும் கடைகளுக்கும் விநியோகம் செய்கிறோம். இத்தொழில் தரமான மாவில் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்தால்தான் இதன் சுவை தரமும் குறையாமல் இருக்கும்' என்றார்.


No comments:
Post a Comment