ஆகஸ்ட் 10: தமிழகத்தில் பாஸ்போர்ட் வழங்கும் பணி முற்றிலுமாக முடங்கியது! புத்தகம் வராததால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இரண்டு மாதமாக தவிப்பு!
மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து, பாஸ்போர்ட் புத்தகம் வராததால், தமிழகத்தில், புதிதாக விண்ணப்பித்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இரண்டு மாதமாக, பாஸ்போர்ட் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். அவசரமாக வெளிநாடு செல்வோர், கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்ல தயார்நிலையில் உள்ளோர் பாஸ்போர்ட் வராததால், செய்வதறியால் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும், வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் வழங்கும் மையங்கள், மத்திய அரசின் வெளியுறவுத்துறையால் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே இருந்த பாஸ்போர்ட் மையம், அதன் பின், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், விண்ணப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஓராண்டுக்கு முன், கலெக்டர் அலுவலக மையங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
தற்போது, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில், பாஸ்போர்ட் மையம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது,நேர்முகத்துக்கான தேதியை முன்னதாகவே வழங்கி விடுவர். அந்த நாளில், உரிய விண்ணப்பங்களுடன் சென்றால், அவற்றை சரிபார்த்து அனுப்பி வைப்பர். அதன்பின், போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.கடந்த, ஜூன் மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு, இதுவரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. மத்திய அரசு தரப்பில் இருந்து,பாஸ்போர்ட் வழங்குவதற்குறிய புத்தகம் வராததால், அச்சடிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில், 25 ஆயிரம், கோவையில், 8,000, மற்ற மையங்களில், 20 ஆயிரம் வரை, பாஸ்போர்ட் அச்சடிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாஸ்போர்ட் கேட்டு பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
அவசரமாக வெளிநாடு பயணிப்போர், வேலை, கல்வி தொடர்பாக வெளிநாடு செல்ல விண்ணப்பித்த பலர் பாஸ்போர்ட் கிடைக்காததால் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறுகின்றனர். விரைவில் புத்தகம் வந்தவுடன், அச்சிட்டு வழங்கிடுவோம் என, பாஸ்போர்ட் மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும், ஒரே நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் பணிமுடங்கியிருப்பதால், புதியதாக விண்ணப்பிப்போரும், பதிவு செய்வதற்கு தயங்கி வருகின்றனர்.
கோவை பாஸ்போர்ட் மைய அதிகாரி ஒருவர்கூறியதாவது:
பாஸ்போர்ட் அச்சிட்டு வழங்குவதற்கான புத்தகம் குறைந்த அளவிலே வருகிறது. 8,000 பேர் காத்திருப்பில் உள்ளனர். சென்னை மையத்தில், 25 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த, ஜூலை, 17 தேதிக்கு பின், பாஸ்போர்ட் வழங்குவது தாமதமாக தான் நடந்து வருகிறது.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து புத்தகம் வந்தால் தான், பாஸ்போர்ட் வழங்க முடியும். ஜூன், ஜூலையில் விண்ணப்பித்தோருக்கு,
பாஸ்போர்ட் கிடைக்க, இன்னும், 20முதல், 30 நாள் வரையாகலாம். புதியதாக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தகவல்: வீகளத்தூர் இணையதளம்


No comments:
Post a Comment