முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் நேற்றைய முன்தினம் விடுவதாக இருந்த ஒப்பந்தம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் நேற்றைய முன்தினம் தன்னிறைவு திட்டம், நிர்மல் பாரத் அபியான் பள்ளி கழிவறை ஒருங்கிணைந்த பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், வைப்பறையுடன் கூடிய சமையலறை திட்டம் மற்றும் கூடுதல் பணிகளுக்காக ரூ30லட்சத்திற்கும் மேலான மதிப்பீடு பணிகள் டெண்டர் விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அணைத்து ஒப்பந்த தாரர்களுக்கும் நோட்டீஸ் ஒரு வாரத்துக்கு முன்பே அனுப்பப்பட்டது.
அதன்படி ஒப்பந்ததாரர்கள் அனைவரும் நேற்றைய முன்தினம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் டெண்டர் விடுவதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரர்கள் சிலர் கூச்சலிட்டனர். ஒருசிலர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, நிர்வாக காரணத்திற்காக டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பின்னர் நிர்வாக காரணத்திற்காக மறுதேதி குறிப்பிடமல் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நோடீஸ் ஒட்டப்பட்டது.
இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறுகையில், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சர்வசாதாரணமாக டெண்டரை ஒத்தி வைத்து உள்ளனர். இதனால் பல்வேறு பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்துள்ளோம். இதுமேலும் தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

No comments:
Post a Comment