பிப்ரவரி 08: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக வலம் வரும் நரேந்திர மோடி, தனது பிரச்சார மேடைகள் தோறும் அந்த மாநிலம் சார்ந்த வரலாற்றுச் சம்பவங்களை குறித்து தவறான குறிப்புகளை கூறி வருகிறார்.
இதுக்குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், மேடைதோறும் தவறான வரலாற்றுக் குறிப்புகளை தெரிவிப்பதை தொடர்ந்து வருகிறார்.
இந்த தவறான வரலாற்று குறிப்புகள் அவரோடு மட்டும் நிற்கவில்லை. மோடி ஆளும் குஜராத் மாநில பள்ளி புத்தகங்களிலும் காணப்படுகிறது.
குஜராத் மாநில 8-ஆம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகத்தில் ஏராளமான தவறுகள் காணக் கிடைக்கின்றன. சாதாரண மக்களுக்கு கூட தெரிந்த சம்பவங்கள் கூட ஒரு அரசாங்க பாடத்திட்டத்தை தயாரித்தவர்களுக்கு தெரியவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம்தான்.
அந்த பாடப் புத்தகத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள் அக்டோபர் 30, 1948 என கூறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான நாள், ஜனவரி 30,1948 என்பதாகும்.
அதுபோல் 2-ஆம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவின் மீது குண்டு வீசியது என கூறப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில், ஜப்பானின் மீதுதான் அமெரிக்கா குண்டுவீசியது.
மேலும் சுதந்திர போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் மிதவாதிகளாக இருந்த தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோரை தீவிரவாதிகள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் 1947-ஆம் ஆண்டு இந்தியா பிரிவினைக்கு பிறகு “இஸ்லாமிக் இஸ்லாமாபாத்” என்ற நாடு உருவானதாம். இதன் தலைநகர் ஹிந்துகுஷ் மலைக் குன்றுகளில் உள்ள கைபர் கட் என்ற யாரும் இதுவரை அறியாத புதிய தகவலும் இப்பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்கள் தேசத்தந்தை காந்திக்காக ஒதுக்கியுள்ளார்கள். அதிலும் தவறுகள் நிரம்பி வழிகின்றன.
அஹ்மதாபாத்தில் கொச்ராபில் 1925 ஆம் ஆண்டு மே மாதம் காந்திஜி முதன் முதலில் சத்தியாகிரக ஆசிரமத்தை நிறுவினார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1915 ஆம் ஆண்டில் காந்திஜி ஆசிரமத்தை நிறுவினார் என்பதுதான் உண்மை.
125 பக்கங்களைக் கொண்ட இந்த பாடப் புத்தகத்தில் 59 உண்மைக்கு புறம்பான தகவல்களும், நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்துப் பிழைகளும் இடம்பெற்றுள்ளன.
பிரபலமான சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்களின் பெயரெல்லாம் தவறாக இடம்பெற்றுள்ளன.
குஜராத் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெயினிங் என்ற நிறுவனம்தான் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. எத்தகைய விபரங்களையும் ஒரு மவுஸ் க்ளிக்கில் கிடைக்கும் வசதிகள் நிறைந்த இக்காலத்தில் இத்தகைய தவறுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வேளையில் புத்தகத்தை வாபஸ் பெற இயலாது என்றும் தவறுகளை பரிசோதித்து சரியான விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்றும் பாடப் புத்தகங்களுக்கான குஜராத் மாநில வாரியத்தின் செயல் தலைவர் நிதின் பெதானி பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment