மார்ச்.5- அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் நஷ்டத்தில இயங்கி வந்தன. டீசல் விலை பலமுறை உயர்ந்த போதிலும் பஸ் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு செலவு, எரிபொருள், உள்ளிட்ட மூலப்பொருட்கள் செலவு ஒருபுறம் அதிகரித்துவிட்டதால் பெரும் நிதி நெருக்கடியில் போக்குவரத்து கழகங்கள் தள்ளாடின.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பஸ் கட்டணம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது.
சாதாரண பஸ்களுக்கு கிலோ மீட்டர் 28 பைசாவில் இருந்து 42 பைசாகவும், எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாகவும், சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கு 42 பைசாவில் இருந்து 60 பைசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் வகை பஸ்களுக்கு 56-ல் இருந்து 70 பைசாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஏ.சி. பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 90 பைசாகவும், ஏ.சி. வால்வோ பஸ்களுக்கு ஒரு ரூபாயில் இருந்து ஒரு ரூபாய் 10 பைசாகவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
இந்த கட்டண உயர்வுக்கு பின் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் ஓரளவிற்கு வருவாய் ஈட்டி வருகின்றன. பஸ் கட்டணம் 50 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டதால் பஸ்களில் கூட்டம் குறைந்தது. 8 அரசு போக்குவரத்து கழகங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் மீண்டும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது.
நீண்ட தூரம் செல்லக்கூடிய இந்த பஸ்கள் பெரும்பாலானவை அல்ட்ரா டீலக்ஸ் வகையை சார்ந்தவையாகும். பகலில் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் காலியாகவே ஓடுகின்றன. இரவில் இயக்கக்கூடிய பஸ்களில் மட்டும் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, செங்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், ஓசூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய விரைவு பஸ்களில் இடையில் ஏதாவது ஒரு ஊரில் இறங்க வேண்டும் என்றால் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது.
உதாரணத்திற்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் விரைவு பஸ்களில் திருச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் செல்ல வேண்டும் என்றால் மற்ற பஸ்களை காட்டிலும் கட்டணம் அதிகமாக இருந்தது. இதனால் அரசு விரைவு பஸ்களில் ஏற மக்கள் தயங்கினார்கள்.
பயணிகள் இல்லாமல் காலியாக ஓடியதால் டீசல் செலவிற்குகூட வருவாய் ஈடுசெய்ய முடியாமல் இருந்தது. விரைவு பஸ்களில் வருவாயை பெருக்க புதிய யுக்தியை இந்த போக்குவரத்து கழகம் கையாள முடிவு செய்தது.
கட் டிக்கெட் என்ற பெயரில் பஸ் கட்டணத்தை திடீரென குறைத்துள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணத்திற்கு பதிலாக எக்ஸ்பிரஸ் கட்டணத்தை வசூலிக்கிறது. அதாவது கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 56 பைசாவாக குறைந்துள்ளது. இந்த கட்டண குறைப்பு முறைப்படி இடையில் நிற்கக்கூடிய ஊர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.
150 கிலோ மீட்டர் தூரத்துக்குள் பயணம் செய்பவர்களுக்கு கட்டண குறைப்பு சலுகை கிடைக்கும். மற்ற போக்குவரத்து கழக பஸ்களில் வசூலிக்கப்படும் இதே கட்டண அளவில் இக்கட்டண குறைப்பு இருப்பதால் விரைவு பஸ்களில் இனி பயணிகள் தயக்கமின்றி ஏறி பயணம் செய்வார்கள் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். அதிரடி பஸ் கட்டண குறைப்பு கடந்த ஒருவாரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:-
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பஸ்களுக்கு மட்டும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 70பைசாவாக வசூலிக்கப்பட்ட கட்டணம் 56 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 25ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு சாதாரண பஸ்களுக்கு இணையாக உள்ளதால் பயணிகள் பஸ்களில் அதிகம் ஏற தொடங்கி உள்ளனர். இந்த கட்டண குறைப்பு பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணம் விவரம் வருமாறு:- (பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள்)
சேலம்- விழுப்புரம்: புதிய கட்டணம் ரூ.110 (ரூ.125)
சேலம்- கோவை: புதிய கட்டணம் ரூ.100 (ரூ.120)
சேலம்- கரூர்: புதிய கட்டணம் ரூ.60 (ரூ.75)
சேலம்- ஈரோடு: புதிய கட்டணம் ரூ.30 (ரூ.40)
சேலம்- திருப்பூர்:புதிய கட்டணம் ரூ.75 (ரூ.85)
சேலம்- நாமக்கல்: புதிய கட்டணம் ரூ. 35 (ரூ.45)
சேலம் - தர்மபுரி: புதிய கட்டணம் ரூ.40 (ரூ.45)
சேலம்- அரூர்: புதிய கட்டணம் ரூ. 40 (ரூ.50)
சேலம்- ஆத்தூர்: புதிய கட்டணம் ரூ.35 (ரூ.45)
மதுரை - திருநெல்வேலி: புதிய கட்டணம் ரூ.95 (ரூ.115)
விழுப்புரம்- சென்னை: புதிய கட்டணம் ரூ. 100 (ரூ.115)

No comments:
Post a Comment