மார்ச் 4: தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 40 கோடி பேரின் விவரங்களை பதிவு செய்யும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலகேணி தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டைக்காக இதுவரை 20 கோடி பேரின் விவரங்கள் திரட்டப்பட்டன. இதில் அனைத்துப் பணிகளும் முடிந்து 13.5 கோடி பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது.
இன்னும் 6.5 கோடி பேருக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மக்களின் தகவலை திரட்டியதும் அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை உடனே வழங்கிட முடியாது. ஒவ்வொருவரின் பயோமெட்ரிக் தகவலையும் கவனமாக ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியுள்ளது. இப் பணியை மெதுவாகத் தான் செய்ய முடியும்.
ஒருநாளைக்கு 10 லட்சம் பேரின் பயோமெட்ரிக் விவரத்தைத்தான் ஒப்பிட முடியும். இதனால்தான் 20 கோடி பேரின் விவரங்களை திரட்டியதும் மற்ற பணிக்காக சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டோம். இதுவரை நடந்த பணி திருப்தி அளிக்கிறது என்றார் நந்தன் நிலகேணி.

No comments:
Post a Comment