தமிழக அரசின் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள், உண்ணா விரதங்கள், சாலை மறியல்கள் என்று பல கட்சிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளன.
மின்வெட்டால் தமிழ் நாட்டில் உள்ள பல தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்து விட்டது. மக்களின் கவனத்தினை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச திட்டங்களை வாரி வழங்கிறது ஜெ. அரசு என்று பல எதிர்க்கட்சிகளின் மேடைகளில் பரப்புரை செய்து வருகிறது.
முத்துப்பேட்டையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை, மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை, மாலை 6 மணி இரவு 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை, இரவில் 11 மணி முதல் 11.30 வரை மீண்டும நடுஇரவில் 1 மணி முதல் 2 மணி வரை ஆக எப்படி பார்த்தாலும் மின்வெட்டு குறைந்தது 10 மணி நேரம் முத்துப்பேட்டையில் உள்ளது.

இப்படியான சூழ்நிலையில் முத்துப்பேட்டையில் உள்ள சிறு வணிகர்கள், தொழில் முனைவோர்கள், கடை வியாபாரிகள் தாங்களுடைய வியாபாரத்தினை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை மக்களிடம் மின்வெட்டை பற்றி கருத்து கேட்ட போது, S.M கொய்யா அறவை மில் உரிமையாளார் S.M முஹம்மது முஹைதீன் அவர்கள் கூறியது, முத்துப்பேட்டையில் 10 மணி நேரம் மின்வெட்டு உள்ளதால் எங்களின் அறவை மில் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அத்துடன் 20 க்கும் மேற்பட்ட அறவை மில்களும் முத்துப்பேட்டையில் நகரில் உள்ளதால் அவர்களுடைய தொழில்களும் பாதிக்கப்படுகிறது என்றார்.
M. சண்முகனாந்தம் (Ex. Post Master) அவர்கள் கூறும் போது, இருண்ட தமிழகத்தினை ஒளிமயமாக்குவோம் என்று கூறி வாக்கு சேகரித்த அதிமுக ஆட்சியில் தற்போது 10 மணி நேரம் 12 மணி நேரம் மின் தடை அமலில் உள்ளது, ஆனால் தமிழகத்தில் ஒளி என்பது கிடையாது. இன்னும் இருளில் தான் உள்ளது.
பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள அல் ஜெஸினா நகைக்கடை உரிமையாளர் M. காதர் மொய்தீன் அவர்கள் கூறியது, முத்துப்பேட்டையில் 40 க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளது, அவர்கள் அனைவரின் தொழில் மின்வெட்டால் பாதிக்கப்படுகிறது, இரவு வேளைகளில் மின் வெட்டு இருப்பதால் கடையில் திருட்டு போய் விடுமோ என்ற அச்ச உணர்வில் ஒவ்வொரு நகைக்கடைக்காரர்களும் உள்ளனர் என்றார்.
பேட்டை - சிவன் கோவில் தெருவினை சார்ந்த R. ராஜேஸ்வரி என்ற குடும்ப தலைவி நமது சிறப்பு செய்தியாளரிடம் கூறியது, தற்போது பரீட்சை நேரம் நெருங்கி வருகிறது, பிள்ளைகள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது, இரவு வேளைகளில் தெருக்கள் இருண்டாக இருப்பதால் நாங்கள் நடக்க முடியவில்லை, இரவில் தெருக்களில் நாய் படுத்து இருப்பது கூட தெரிய வில்லை, மற்றும் கொசு தொல்லையும் உள்ளது இந்த அரசாங்கம் பொது மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொன்னது அந்த நன்மை எப்போ.. தம்பி எங்களுக்கு கிடைக்கும்..!..? என்றார்.

சின்னக்கட்சி மரைக்காயர் தெருவினை சார்ந்த M. ஹாஜா அலாவுதீன் அவர்கள் கூறும் போது, இரவு வேளையில் பிள்ளைகள் படிப்பதற்கு ரொம்பவும் சிரமமாக உள்ளது, சுப்ஹூ தொழுகை, இஷா தொழுகை போவதற்கும் என்னை போல் வயதானவர்கள் சிரமப்படுகிறார்கள் கரண்ட் இல்லாததால் தெருவில் என்ன கிடக்கிறது என்று கண்ணுக்கு தெரியமாட்டேன் என்கிறது என்றார்.
பழைய பேரூந்து நிலையம் அருகே உள்ள கீர்த்தனா - மல்டிமீடியா உரிமையாளர் K. நடராஜன் அவர்கள் கூறும் போது, முத்துப்பேட்டையில் கல்வி பயிலும் பல மாணவ மாணவிகள் இண்டர்நெட் படிப்பதற்கு மற்றும் பயன் படுத்துவதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள், மற்றும் மின்சாரம் வெட்டை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து இயக்கங்களும், முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து போராட்டத்தினை அறிவிக்க வேண்டும் என்றார்.

நன்றி: முத்துப்பேட்டை.org
