
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கி பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை மற்றும் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. சுரங்கப்பாதை வழியாகவும் மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ ரெயில் விடப்படுகிறது. மேம்பாலம் வழியாக செல்வதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
சுரங்கப் பாதைக்கான பணிகளை தொடங்க ஜப்பானில் இருந்து எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அவை பொறுத்தப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்குகிறது.
சுரங்கப்பாதை முதல் கட்டமாக அண்ணா சாலையில் ஜெனரல் பீட்டர்ஸ் சாலை சந்திப்பு முதல், ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரையிலான பகுதிக்கு இடைப்பட்ட சாலையின் ஒருபுறம் மெட்ரோ ரெயில் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்படுகின்றது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது.
அண்ணா சாலையில் அண்ணா சிலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஜெனரல் பீட்டர்ஸ் சாலை, உட்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையில் இணைந்து செல்லலாம். அண்ணா சாலையில் உள்ள நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் இணைப்பு சாலைகள் வழியாக செல்லலாம்.
இதேபோல அண்ணா சாலையில் சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து பின்னி சாலை, பின்னி லிங்க் சாலை வழியாக அண்ணா சாலைக்கு திருப்பி விடப்பட உள்ளன. இந்த சாலைகளில் இடைப்பட்ட பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு செல்வோர் சர்வீஸ் சாலைகள் வழியாக செல்ல வழிவகை செய்யப்படுகிறது.
குறிப்பாக எல்.ஐ.சி., டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்க உள்ளதால் இந்த போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். வருகிற 25-ந்தேதி முதல் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
