முத்துப்பேட்டை அருகே மோட்டார் ஆபரேட்டரை மண்வெட்டியால் வெட்டிய ஊராட்சி துணை தலைவர் உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மங்களூர் ஊராட்சிக்கு சொந்தமான இறவை பாசன மோட்டார் உள்ளது. இங்கு ஆபரேட்டராக அறிவழகன்(54) உள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு பணியிலிருந்த அறிவழகன் தண்ணீர் சப்ளை செய்ய மோட்டாரை ஆன் செய்தார். மோட்டார் சூடானதால் சுவிட்சை ஆப்செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து இயக்கலாம் என அங்கேயே காத்திருந்தார். அப்போது அங்கு வந்த விவசாயி சந்திரசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆசைதம்பி ஆகியோர் மோட்டார் சுவிட்சை போடும்படி அறிவழகனிடம் கூறினர். அவர் சிறிது நேரத்துக்கு பிறகு போடுவதாக கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆசைதம்பி, சந்திரசேகரன் ஆகியோர் சேர்ந்து மண்வெட்டியால் அறிவழகனை வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிந்து 2 பேரையும் தேடி வருகிறார்.


No comments:
Post a Comment