முத்துப்பேட்டையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் படகுகளில் அதிரடி சோதனை… - BBC

BBC

Thursday, June 26

முத்துப்பேட்டையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் படகுகளில் அதிரடி சோதனை…


ஜுன் 26: மும்பையில்  2008ம்  ஆண்டு  ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு கடல்வழி ஊடுருவல் காரணமாக அமைந்ததால், இந்தியாவில் உள்ள அனைத்து கடலோர பகுதிகளிலும் வருடம் இருமுறையேனும் தீவிரவாத ஒத்திகை  நிகழ்ச்சியை  போலீசார் நடத்தி, பொதுமக்களை உஷார்படுத்தவும், விழிப்புணர்வு  எற்படுத்தவும்  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 3ம் தேதி காரைக்காலில்  கடைசியாக  ஹம்லா  ஆபரேஷன்  நடைபெற்றது.

நடப்பாண்டின்  2ம் கட்ட ஹம்லா ஆப்ரேஷன் நேற்று காலை துவங்கியது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத  கடலோரத்தில்  நடைபெற்ற  இந்த  ஒத்திகை நிகழ்சியில், எஸ்.பி பழனிவேலு தலைமையில், 4 இன்ஸ்பெக்டர்கள், 12 சப்.இன்ஸ்பெக்டர்கள்  மற்றும்  120 போலீசார்  என  மொத்தம்  137 பேர் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டனர்.  மேலும், நகர் பகுதியில் வாகன சோதனை, லாட்ஜ் மற்றும் மாவட்டத்தின்  அனைத்து  எல்லைகளிலும்  தீவிர  சோதனை  நடைபெற்றது.

முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் உட்பட ஏராளமான போலீசார் கடலோர பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பேட்டை, கோவிலூர், இடும்பாவனம், தில்லைவிளாகம்,  கோபால  சமுத்திரம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனை சாவடி  அமைக்கப்பட்டு  வாகன  தணிக்கை செய்யப்பட்டது.  கடலோர கிராமங்களில்  வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதியிலும் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  கடலுக்கு  செல்லும்  மீனவாகள்  படகுகளிலும்  போலீசார்  சோதனை நடத்தினர்.

கடலுக்கு  செல்லும்  மீனவர்களிடம் உரிய ஆவணங்கள், அடையாள அட்டை உள்ளதா, டீசல் எத்தனை  லிட்டர் வைத்திருக்கிறார்கள் என ஆய்வு செய்தனர். கடலிலோ, கடற்கரை பகுதிகளிலோ புதிய  நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.  இந்த சோதனை  இன்றும்  நடக்கிறது.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment