பிப். 22-
சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு எந்தெந்த நேரத்தில் மின்வெட்டு அமலுக்கு கொண்டு வருவது குறித்த பட்டியலை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். தமிழகத்தின் மின் பற்றாக் குறையை சமாளிக்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் மின் பகிர்மானம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்வெட்டு இருப்பதால் விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தொழில் சார்ந்தவர்கள் பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவதால் மின் வெட்டை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் தற்போது உள்ள ஒரு மணி நேரம் மின்வெட்டை 3 மணி நேரம் அதிகரிக்கவும், தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக ஒரு நாள் மின் விடுமுறை விடவும் மின்சார வாரியம் பரிசீலனை செய்து அரசின் ஒப்புதலை பெற முடிவு செய்துள்ளது.
சென்னையில் பகலில் 2 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டை சுழற்சி முறையில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு மின்வெட்டு நேரம் 6 மணி நேரமாக குறைய வாய்ப்பு உள்ளது. பகல் நேரத்தில் 4 மணி நேரமும், இரவில் 2 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 40 மின் வட்டத்திலும் மின்வெட்டை முறையாக அமல்படுத்த அதிகாரிகள் தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு மின்வட்டத்திலும் எந்த நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்துவது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்வினியோகத்தை முனைப்புடன் செயல்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு நேரங்களில் மின்வெட்டு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காலையில் தொடங்கி மாலை வரை பகல் நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும்.
இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் மாறி மாறி ஒவ்வொரு பகுதிக்கும் மின்தடை செய்யப்படும். அதற்கான மின்பகிர்மான கணக்குகளை அதிகாரிகள் தயாரித்து தயாராக வைத்துள்ளனர். அரசிடம் இருந்து மின்வெட்டு அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வந்தவுடன் தயாரித்து வைக்கப்பட்ட சுழற்சி முறை நேரங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.
இதற்கான அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளிவரலாம் என்று மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.