
நவம்பர் 07: பஹ்ரைன் நாட்டின் தலைநகரில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்த தொடர் குண்டுவெடிப்பில், தமிழகத்தில் இருந்து அங்கு பணிக்கு சென்றிருந்த ஒருவர் பலியானார். தலைநகர் மனாமாவை அடுத்த அடில்யா, குதைபியா மற்றும் ஹுரா பகுதிகளில் அடுத்தடுத்து 5 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய தூதரக அலுவலகம் அமைந்துள்ள குதைபியா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஆசியாவைச் சேர்ந்த இரு பணியாளர்கள் பலியாகினர் எனவும், இதில் ஒருவர் இந்தியர் எனவும் ஆரம்பத்தில் கூறப்பட்டது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, உயிரிழந்தவர், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை திருநகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குதைபியா பகுதியில் நின்றிருந்த கார் அருகேயிருந்த பையை திருநாவுக்கரசு காலால் தட்டிவிட்டபோது, முதலாவது வெடிகுண்டு வெடித்தது என பஹ்ரைன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் குண்டு வெடிப்பில் திருநாவுக்கரசு உயிரிழந்தார்.
இது நடைபெற்று சிறிது நேரத்தில், நகரின் அவால் சினிமா தியேட்டர் அருகே இரண்டாவது வெடிகுண்டு வெடித்தது. அதற்கு அருகே நின்றிருந்த ஆசிய நாட்டவர் ஒருவர் பலியானார். மூன்றாவது குண்டு அத்லியா பகுதியில் வெடித்தபோது, ஒருவர் படுகாயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் இந்தக் குண்டுவெடிப்புகளை ‘தீவிரவாத நடவடிக்கை’ என அறிவித்துள்ளது. ஆனால், இதில் பெரிய தீவிரவாத அமைப்புகள் ஏதும் தொடர்பு பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. காரணம், வெடித்த அத்தனை குண்டுகளுமே, ப்ரஃபெஷனலாக தயாரிக்கப்பட்ட குண்டுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment