பிப். 22-
ஈரான் அணுமின் உற்பத்தியை பெருக்கி வருகிறது. அதற்காக அணு உலைகளை அமைத்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மறைமுகமாக அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.
அணு ஆயுதங்கள் மூலம் தங்களை ஈரான் தாக்க கூடும் என அதை சுற்றியுள்ள நாடுகள் அச்சப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் கடும் பதட்டத்தில் உள்ளது.
எனவே அணு உலைகள் மீது குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்க கூடும் என ஈரான் கருதுகின்றது. ஆகவே பாதுகாப்பு நடவடிக்கைக்காக விண்ணில் போர் ஒத்திகை நடத்த ஈரான் முடிவு செய்தது.
அதற்கான போர் ஒத்திகை நேற்று தொடங்கியது. இது 4 நாட்கள் நடைபெறும் என கதமால்-அன்பியா விமானப் படை தள ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.அதில், ஏவுகணைகள் போர் விமானங்கள் மற்றும் ராடர் கருவிகள் உள்ளிட்ட அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் வகையில் அவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு சரொல்லா (கடவுளின் பழிக்கு பழி) என பெயரிட்டுள்ளனர். மேலும் அணு உலைகளை பாதுகாக்க 1 லட்சத்து 90 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
